Showing posts with label Thoothukudi. Show all posts
Showing posts with label Thoothukudi. Show all posts

Tuesday, February 23, 2016

On Tuesday, February 23, 2016 by Unknown in , ,    
கோவில் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

மாத சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். காலியாக உள்ள இடங்களில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2321678 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை, மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார். 
On Tuesday, February 23, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி பைக்கில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி, அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (48). விவசாயி. இவர் நேற்று மாலை அத்திமரப்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நகர் நோக்கிச் சென்ற லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த லாரன்ஸ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான முத்தையாபுரம் சூசையா நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் அஜித் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Monday, February 22, 2016

On Monday, February 22, 2016 by Unknown in , ,    
   

     தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல ;தொடர்பான அரசியல் கட்சியினர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப.அவர்கள் தலைமையில இன்று(22.02.2016); நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
                  வாக்காளர் பட்டியலினை செம்மை படுத்தும் விதமாக இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்திட 15.02.2016 முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.24.02.2016 அன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் நடத்திட வேண்டும்.மேற்கண்ட கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கண்டறியப்பட்ட இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர் பட்டியல் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும். மேற்படி பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து பட்டியலில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கையொப்பம் அளிக்க வேண்டும்.
               இறுதியான நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் விவர பட்டியல் 25.02.2016 அன்று வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் மாவட்ட இணைய தளத்திலும் வெளியிடப்படும். அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களை 24.02.2016 அன்று  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சந்தித்து நீக்கம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியலை பெற்று சரி பார்த்து கையொப்பமிட அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து அதன் விவரத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கோள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Unknown in , ,    
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா எட்டாம் நாளான இன்று (சனிக்கிழமை) சுவாமி பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருச்செந்தூரில் மாசித்திருவிழா கடந்த 13-ம் தேதி சனிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். மாலையில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இன்று எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை  பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.  தொடர்ந்து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
On Sunday, February 21, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகில் திடீரென மரங்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காற்றில் மாசு ஏற்படுத்தி வருகிறது. காற்றில் உள்ள மாசுவை கண்டறிவதற்கான உபகரணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கப்படவில்லை.
 
இந்நிலையில் வ.உ.சி.துறைமுகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சமீபகாலமாக திடீரென கருகி வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து கம்பீரமாக காட்சி அளித்த பல்வேறு மரங்கள் இன்று காய்ந்து இலைகள் இல்லாமல் கம்புகளாக காட்சி அளிக்கிறது. அதே போன்று இரவு நேரங்களில் மின்தடையும் அதிகரித்து வருகிறது. மின்கோபுரங்களில் உள்ள இன்சுலேட்டர்கள் திடீரென சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இதற்கு என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயண கழிவே காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கழிவு இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கலந்து அமிலமழையாக பெய்கிறது. இதனால் மரங்கள் கருகியும், மின்சார இன்சுலேட்டர்கள் சேதம் அடைந்தும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அவர்கள் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய கூலிங் டவரில் இருந்து வெளியேறும் ரசாயனம் காரணமாக அந்த பகுதி துணை மின்நிலையம், மின்தொடர் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்கள் கருகி வருகின்றன. அதனை ஆய்வு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகருக்குள் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வுகள் நடத்தி உரிய தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Saturday, February 20, 2016

On Saturday, February 20, 2016 by Unknown in , ,    

தமிழக முதல்வரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் 15,000 பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். அன்னதான விருந்து, விழா ஏற்பாட்டினை ஏ.பி.ஆர்.கவிஅரசு சிறப்பாக செய்திருந்தார். உடன் துணை மேயர் சேவியர், குருத்தாய், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, கவுன்சிலர்கள் மெஜுலா, சந்திரா செல்லப்பா, வழக்கறிஞர் யு.எஸ்.சேகர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

On Saturday, February 20, 2016 by Unknown in , ,    
திருச்சியில் இருந்து பணகுடி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த செல்வபெருமாள் ஓட்டி வந்தார். இன்று காலை 8 மணி அளவில் லாரி கயத்தாறு டோல் கேட் அருகே வந்தது. அப்போது திடீரனெ கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் பண வசூல் கவுன்டர் மீது லாரி மோதியது.
இதில் அங்கு பணம் வசூல் செய்து கொண்டிருந்த வடக்கு இலந்தகுளத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபத்து நடந்ததையடுத்து டோல்கோட் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த காளிராஜ் கூறும் போது, ‘நெல்லை– மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள முக்கியமான டோல்கேட் கயத்தாறு ஆகும். இங்கு உள்ள பண வசூல் கவுன்டர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பு சுவர், தடுப்பு கம்பிகள் என எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் பலன் இல்லை. எனவே உடனடியாக நிர்வாகம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் டோல்கேட் வழியாக வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றன. பின்னர் 2 கவுன்டர்கள் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அந்த வழியாக சென்றன. 

Friday, February 19, 2016

On Friday, February 19, 2016 by Unknown in , ,    
நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் பெயர் இணையதளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலை சரி செய்யும் விதமாக இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய கடந்த 15–ந் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் நடத்துவார்கள். இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர் பட்டியல், வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும். அந்த பட்டியலில் உள்ள பெயர்களை அவர்கள் சரிபார்ப்பார்கள்.

வாக்குச்சாவடி நிலை முகவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனுப்பி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சந்தித்து, நீக்கம் செய்யப்பட உள்ளவர்களின் பட்டியலை சரிபார்த்திட, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் பெயர்கள், வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும், www.thoothudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இந்த பட்டியல், வருகிற 22–ந்தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள், இந்த பட்டியலில் உள்ள நபர்களை நீக்கம் செய்வது தொடர்பாக கருத்து இருந்தால், அதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
On Friday, February 19, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் மோட்டார் பைக்குகள திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் தளவாய் (31). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றார். மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைக் திருடிய தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியை சேர்ந்த முத்து சுந்தர் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (40). இவர் அப்பகுதியில் உள்ள பூங்காவில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில் தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அஜீத்குமார் (16), முத்தையாபுரத்தை சேர்ந்த (17) ஆகியோர் இசக்கிமுத்துவின் மோட்டார் பைக்கை  திருடியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tuesday, February 16, 2016

On Tuesday, February 16, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் இன்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஊதிய உயர்வு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலளார் ராமமூர்த்தி தலைமையில், அங்கன் வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.  முன்னதாக குரூஸ் பர்னாந்து சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Monday, February 15, 2016

On Monday, February 15, 2016 by Unknown in , ,    
தேசிய அளவிலான கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வழங்கினார்.

தமிழ்நாடு சுற்றுலா துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மணப்பாடு கிளாசிக் விளையாட்டு குழு ஆகியன இணைந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை கிராமத்தில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகளை நடத்தியது. கடந்த 12-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டி நேற்று நடந்தது.
 
ஆண்கள், பெண்களுக்கான குறும்படகு போட்டி, காற்றாடி இணைந்த அலைசறுக்கு போட்டி, பாய்மர அலைசறுக்கு போட்டி, நின்றபடி துளாவல் போட்டி, நீச்சல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. பெண்களுக்கான குறும்படகு போட்டியில் விளாசினி முதலிடத்தையும், தந்தி 2-வது இடத்தையும், சிஞ்சனா கவுடா 3-ம் இடத்தையும், ஆண்களுக்கான குறும்படகு போட்டியில் சென்னையை சேர்ந்த சேகர் முதலிடத்தையும், ராமேசுவரம் ஜெரால்டின் 2-வது இடத்தையும், சென்னை ராஜசேகர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
 
நின்றபடி துளாவல் போட்டியில் பெண்கள் பிரிவில் தந்தி முதலிடத்தையும், சிஞ்சனா கவுடா 2-ம் இடத்தையும், விளாசினி 3-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சென்னை சேகர் முதலிடத்தையும், விக்கி 2-வது இடத்தையும், மூர்த்தி மேகவர்ணன் 3-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்களுக்கான காற்றாலை அலை சறுக்கு போட்டியில் கோவிந்த் முதலிடத்தையும், அர்ஜூன் மோத்தா 2-ம் இடத்தையும், முகம்மது ஆசிக் 3-ம் இடத்தையும், ஆண்களுக்கான பாய்மரகு போட்டியில் ஆதிஷ், முஸ்தபா, உசேன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். 

பெண்களுக்கான போட்டியில் சுஷ்மிதா, நிவேதிகா, லெபன்சி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உள்ளூர் வீரர்களுக்கான கயிற்றில் நின்று ஆடுதல் போட்டியில் பெவிசன், ஜெபாஸ்டின், எபினேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், அலை சறுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் அருண் மிராண்டா வரவேற்றார். உடன்குடி யூனியன் துணை தலைவர் கே.வி.ராஜதுரை, மணப்பாடு பஞ்சாயத்து துணை தலைவர் ரூபஸ் மற்றும் கோவில் கமிட்டி தலைவர்கள் பயஸ், கயஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.  பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.
 
பின்னர் ஆட்சியர் ரவிகுமார் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 163 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதி உள்ளது. அதில் மணப்பாடு கடற்கரை கிராமம்தான் மிகப்பெரியது. இது ஒரு அழகான கிராமம். இங்குள்ள மக்களுக்கு முக அழகை விட மன அழகு மிக அதிகம். எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் இங்கு தேசிய அளவில் நடைபெற்ற போட்டியை இருதரப்பு மக்களும் ஒற்றுமையாக இருந்து வெளிநாட்டு வீரர்களை வரவேற்று நீங்கள் ஆதரவு கொடுத்தது மறக்க முடியாது.
 
மணப்பாடு கிராமம் இந்திய சுற்றுலா துறையில் இடம் பெறும். இங்கு ரூ.7 கோடி மதிப்பில் விளையாட்டு அகாடமி அமைப்பதற்கும், ரூ.5 கோடி மதிப்பில் பூங்கா, சாலை சீரமைப்பு, நவீன விளக்குகள் ஆகியவற்றிற்கும் திட்டப்பணிகள் தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கும். இந்த போட்டி 2-வது வருடமாக நடந்தது. இனி ஆண்டு தோறும் இங்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இவ்வாறு ஆட்சியர் ரவிகுமார் பேசினார்.
 
விழாவில் சார் ஆட்சியர்கள் கோபால சுந்தர்ராஜ் (தூத்துக்குடி), தியாகராஜன் (திருச்செந்தூர்), திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, சங்கர நாராயணன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாசானமுத்து, சங்கர், பாலசுப்பிரணியன், விளையாட்டு போட்டி உதவி இயக்குனர் பிரான்சினா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Friday, February 12, 2016

On Friday, February 12, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் லேப்டாப், ஐ-பேடு  திருடிய 3பேர் சிக்கினர்.

தூத்துக்குடி இடையர்காடு காவல்காடு பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் இம்மானுவேல். இவருடைய மகன் ஜேம்ஸ் (36). தொழிலதிபர். இவர் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு, தனது காரை நிறுவனத்தில் நிறுத்தி இருந்தாராம். 

அப்போது அங்கு வந்த சிலர், காரில் இருந்த லேப்டாப் மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக 3-வது மைல் பகுதியை சேர்ந்த தினேஷ், சிங்கதுரை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
On Friday, February 12, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படுகிறது. 

தூத்துக்குடி சிதம்பரநகரில் வ.உ.சி கல்விக்கழகம் சார்பில் ரயில்வே முன்பதிவு மையம் கடந்த 16.2.2013 முதல் செயல்பட்டு வருகிறது. இது தூத்துக்குடியில் மேற்குப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த முன்பதிவு மையத்தினை வ.உ.சி கல்விக்கழகம் சேவை அடிப்படையில் நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ரயில் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.25 வசூலிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதாம். இதற்கு வ.உ.சி. கல்விக் கழகத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக ரயில்வே முன்பதிவு மையம் மூடப்படுகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான நட்டர்ஜியிடம் கேட்டபோது, இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார். 

Thursday, February 11, 2016

On Thursday, February 11, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் செந்தூர்கனி (17). நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

இது போல், தூத்துக்குடி அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் முத்துலட்சுமி (13). குளத்தூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் சக்திகுமார் (17). தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  
On Thursday, February 11, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேப் நிமோ என்ற சரக்கு கப்பல், கொழும்பு வழியாக நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர் பெட்டிகள் லாரி மூலம் தெர்மல் நகரில் உள்ள தனியார் யார்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த கண்டெய்னர் பெட்டிகளில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது,  சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.43 கோடி எனத் தெரிகிறது. மலேசியாவில் இருந்து, வீட்டு உபயோகப் பொருட்களுடன் சேர்த்து 12 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக மறைத்து வைத்து தங்கத்தை கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரிகிறது.  கண்டெய்னர் பெட்டியின் உள்ளே வாஷிங் பவுடர் பாக்கெட்டுக்குள் இந்த தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக முகம்மது ரபீக், செல்வராஜ், ராஜூ, ரஹ்மத் அலி ஆகிய 4பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wednesday, February 10, 2016

On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் 162 கிமீ நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு கடற்கரைகள் இயற்கை எழில் கொஞ்சும், சிறந்த கடற்கரைகளாக திகழ்கிறது. இதில் அழகான கடற்கரை கிராமமான மணப்பாடு, கிழக்கு கடற்கரை சாலையில் திருச்செந்தூரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 

மணப்பாடு கடற்கரையின் சிறப்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையாக உருவான சிறு குன்றுகளின் அணிவகுப்பும் கடலுக்குள் நீண்டுகொண்டிருக்கும் அதன் முனையுமாகும். பழங்காலந்தொட்டே, மணப்பாடு கிராமம் வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பழமையான அழகிய கட்டிடங்களையும் ஆலயங்களையும் கொண்ட இந்த கிராம கடற்கரையை காண்போரின் கண்களுக்கு விருந்து படைக்கக் கூடியவை.

தமிழ்நாட்டின் நீண்ட கடலோரம் மிக அழகான கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது. சில குறிப்பிட்ட கடற்கரைகளில் காணப்படும் இயற்கையான அமைப்புகள், பாய்ப்படகு ஓட்டம் (Sailing), அலைச்சறுக்கு ஓட்டம் (Surfing), காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம் (Kite Boarding), குறும்படகு ஓட்டம் (Kayaking) மற்றும் நிற்படி-துழாவல் ஓட்டம் (Stand Up Paddle) போன்ற கடல் சாகச விளையாட்டுக்களுக்கு மிகவும் ஏற்றது. நாட்டிலேயே முதல் முறையாக மணப்பாட்டில்தான் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 09, 10 மற்றும் 11 தேதிகளில் இத்தகைய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மணப்பாடு கடற்கரை கிராமத்தில் வருகின்ற 2016 பிப்ரவரி மாதம் 12, 13 மற்றும் 14 தேதிகளில் "மணப்பாடு க்ளாசிக் - பாய்படகு மற்றும் அலைச்சறுக்கு விளையாட்டுத் திருவிழா 2016” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் ஆண்டு தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாய்ப்படகு ஓட்டம், அலைச்சறுக்கு ஓட்டம், காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம், குறும்படகு ஓட்டம், காற்று சறுக்கு ஓட்டம், மற்றும் நிற்படி-துழாவல் ஓட்டம் (Stand Up Paddle) போன்ற 6 முக்கிய கடல் சாகச விளையாட்டுக்கள் ஒரே இடத்தில் போட்டிகளாக மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

‘மணப்பாடு க்ளாசிக் - 2016 நிகழ்ச்சி, ‘Manapad Surf Resort” என்ற கடல் சாகச விளையாட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுAqua outback, Cove long Surf Point, Quest Expeditious, Kite boarding Federation of India மற்றும் Surfing Federation of India போன்ற சாகச விளையாட்டு நிறுவனங்கள் இணைந்த நிபுணர் குழுவால் நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முதன்மையான ஆதரவோடும் மற்ற பெருநிறுவனங்களின் பங்களிப்புடனும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையரின் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், இந்த மொகா நிகழ்வுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறது.

போட்டிகள் மட்டுமன்றி, பார்வையாளர்கள் பங்கு பெறுவதற்கென யோகப்பயிற்கி, சிறப்பு உடல் தகுதிப் பயிற்சி, அலைச்சறுக்கு பயிற்சி, குறும்படகு பயிற்சி மற்றும் பலகைச் சறுக்கு பயிற்சி போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் மூன்று நாட்களுக்கும் கலைநிகழ்ச்சிகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உள்ளுர் உணவு வகைகளின் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை, இந்த நிகழ்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடற்சாகச விளையாட்டுக்களை ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு குறிப்பாக மணப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவக் கூடியது. என மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.
On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை  விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே புளியம்பட்டி அருகே உள்ள உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (45). விவசாயி. இவரது மனைவி சரவணம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகையா வேலைக்கு செல்லமால் ஊர் சுற்றித்திரிந்துள்ளார். சரவணம்மாள் சிங்காத்தாகுறிச்சியில் தனது தோட்டத்தில் வேலைபார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் முருகையாவுக்கும் அவரது மனைவி சரவணம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 21.3.2014 அன்று, தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகையா கோடாரியால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகைய்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயராஜ், மனைவியை கொலைசெய்த முருகையாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏவிமுத்து ஆஜரானார். 
On Wednesday, February 10, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வாகனம் மோதி உயிரிழந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி விஸ்வபுரத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு, இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது எப்போதும் வென்றான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த விஸ்வபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (16) என்பவர் சிசிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, விபத்திற்கு காரணமானர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் விஸ்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 100பேர் பாளை ரோட்டில் விவிடி சிக்னல் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக காலை 10.40 மணி முதல் 11.25 வரை தூத்துக்குடி நெல்லை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tuesday, February 09, 2016

On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா வருகிற 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 22ம் தேதி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம், தங்கு தடையின்றி மின்வசதி, தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் கோவில் வளாகங்களில் கொசு மருந்து  தெளித்தல், மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டது. 

பக்தர்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது, கடற்கரையில் பாதுகாப்பு எற்பாடுகள் செய்தல், மீன்வளத்துறையினர் முத்துக்குழி பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினருடன் இணைந்து கடலில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற ஏற்பாடுகளை செய்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், திருச்செந்தூர் கோட்டாச்சியர் தியாகராஜன், திருக்கோயில் இணை ஆணையர் வரதராஜன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
On Tuesday, February 09, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு மனிதவள துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் தங்கமயில் விருது கிடைத்துள்ளது. 

மும்மையில் நடைபெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ்-ன் 10வது சர்வதேச சமூக பொறுப்புணர்வு மாநாட்டில் ஸ்டெர்லைட் காப்பர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் நீர் பாதுகாப்பு துறை அமைச்சர் பங்கஜ் முண்டே வழங்க வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் தலைவர் ரோமா பல்வானி மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் மனிதவள தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன் இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.

ஆர்வமிக்க தலைமை மேலாண்மை நிர்வாகம், நிறுவனத்தில் மனிதவள கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மேலும் ஊழியர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் மனிதவள முயற்சிகள் போன்றவையே இந்த விருதினை ஸ்டெர்லைட் காப்பர் பெற முக்கிய காரணம் ஆகும். மொத்தம் 391 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் குழு, தனிக்கை மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டு தங்கமயில் விருது வழங்கப்பட்டது.